21 அக்டோபர், 2012

மழை - பொழப்பு


மழை 
====

மிஞ்சிப்போனா என்னசொல்லிற முடியும் உன்னால 
இந்த மழையைப் பத்தி
ஓதமேறுன கொட்டாய்ல 
கோணில மொடங்கியும் 
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட 
சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா 
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்துசெத்த சொந்தத்த 
எடுக்க வக்கத்து பொணத்தோட 
ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க 
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு 
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம 
உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு 
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா 
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ 
மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு 
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

- ஆதவன் தீட்சண்யா